Wednesday, May 15, 2024
Home » உலகெங்கும் எண்ணிக்கையற்ற ரசிகர்களின் செவிக்கு இனிமை ஊட்டியவர் பவதாரிணி

உலகெங்கும் எண்ணிக்கையற்ற ரசிகர்களின் செவிக்கு இனிமை ஊட்டியவர் பவதாரிணி

இசைஞானி இளையராஜாவின் புதல்வி மறைவினால் திரையுலகத்தினரும், ரசிகர்களும் பெருந்துயர்!

by mahesh
January 27, 2024 9:11 am 0 comment

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு தனியார் மருத்துவமனைக்கு வந்தார் இளையராஜா.

இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வியாழக்கிழமை மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்ததாகவும் அவரது உடலை சென்னை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நேற்றைய தகவல்கள் தெரிவித்தன.

இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் ‘மயில் போலப் பொண்ணு ஒன்னு’ என்ற இவர் பாடிய பாடல் மூலம் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. ராமன் அப்துல்லா, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் அவர் பாடியுள்ளார்.

இலங்கைக்கு ஒரு வாரம் முன்பு, பவதாரிணி உள்ளிட்ட சிலர் வருகை தந்துள்ளனர்.

கொழும்பில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து, அங்கு தங்கியிருந்த நிலையில், பவதாரணிக்கு ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு வியாழக்கிழமை திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பவதாரணி கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார்.

புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டமையே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவதாரிணி பல முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார்.

எம்.குமரன் படத்தில் வரும் ‘அய்யோ அய்யோ’ பாடல், தாமிரபரணி படத்தின் ‘தாளியே தேவையில்ல’ பாடல் போன்ற ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி.

அதேபோல், காதலுக்கு மரியாதை படத்தில் வரும் ‘என்னைத் தாலாட்ட வருவாளா’, ஆயுத எழுத்து படத்தின் ‘யாக்கைத் திரி’, காக்க காக்க படத்தின் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார்.

1991-ஆம் ஆண்டு இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமணமாலை என்ற இசைத் தொகுப்பில் ‘ஆராவமுதே’ என்ற பாடலை பவதாரிணி பாடினார்.

அலெக்சாண்டர், கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, தனம், கோவா, மங்காத்தா, அனேகன் ஆகிய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.

தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவருக்கு இரங்கல் தெரிவித்து பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் பவதாரிணி இளையராஜாவும் ஒருவர். பத்திரமாகப் போய் வா, அன்புப் பெண்ணே!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தைரியத்துடன் இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன். இது மிகவும் மனதை உடைக்கும் செய்தி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“பதவாரிணியின் குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவரது குரல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான குரல். இவ்வளவு இளம் வயதில் இப்படிப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் தினா.

பாடகி பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

பவதாரிணியின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

“இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது,” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், “இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT