இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்தப் போட்டிகள் முன்னதாக கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்தது. எனினும் போட்டி இடம் மாற்றப்பட்டதற்கான காரணத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடவில்லை. எனினும் அண்மையில் முடிவுற்ற இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றதோடு போட்டிகளை நேரடியாக காண்பதில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்டி எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி ஆப்கான் அணி இலங்கை வரவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனை அடுத்து ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக இரு அணிகளும் கண்டி செல்லவுள்ளன. பெப்ரவரி 09, 11 மற்றும் 14 ஆம் திகதிகளில் பகலிரவு ஆட்டமாக ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதனையடுத்து தம்புள்ளையில் பெப்ரவரி 17, 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் இரு அணிகளும் மோதும் டி20 போட்டிகள் நடைபெறும்.