இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பதுளை பிராந்தியத்துக்கான ஒருங்கிணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷேன் பிரதீஸ் வடிவேல் சுரேஷ், மலையகத்தில் இளைஞர், யுவதிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிபூண்டுள்ளார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பதுளை பிராந்தியத்துக்கான ஒருங்கிணைப்புச் செயலாளராக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட இளம் தொழிற்சங்கவாதியான ஷேன் பிரதீஸ் வடிவேல் சுரேஷ் துடிப்பு மிக்கவராவார்.
தந்தையின் வழியில் தானும் சமூகப் பணிகளை ஆற்ற வேண்டுமென்ற ஆர்வத்துடன் களமிறங்கியுள்ள இவர், தனது ஆரம்பக் கல்வியை பண்டாரவளை சென் தோமஸ் கல்லூரியில் பயின்றார்.
மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டுள்ள இவர், மலையகத்தில் தோட்டங்களை நிர்வகிப்பது தொடர்பான பயிற்சியையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தில் திறமைமிக்க இளைஞர், யுவதிகளை இனங்கண்டு அவர்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளார்.
சமீபத்தில், ITUC-Asia Pacific ஆசிய தொழிற்சங்க சம்மேளனத்தில் இலங்கை சார்பாக இவர் கலந்துகொண்டார். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 32 நாடுகளின் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றிய இவர், இலங்கையின் இளைஞர் பிரதிநிதியென்ற வகையில் திறமையானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ITUC-AP இல் அவரது பங்குபற்றல், உள்ளூர் முயற்சியாளர்களை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றது. மலையகத்தில் திறமையான இளைஞர்களுக்கு ஆதரவளித்து, விளையாட்டுத் துறையில் அவர்களை பிரகாசிக்கச் செய்து, தேசிய நீரோட்டத்தில் அவர்களின் அங்கீகாரத்தை உறுதி செய்வதற்கு அவர் அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகிறார்.
பதுளையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையை தொடர்ந்து வழிநடத்தி, விளையாட்டுத்துறை அமைச்சருடன் இணைந்து அவர் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார். இளைஞர்களிடையே நல்லுறவைப் பேணி சிறந்த சமூகத்தை உருவாக்கி மலையகத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்கிறார் அவர்.
தேசமான்ய எம்.ஏ.எம்.ஹசனார் (ஊவா சுழற்சி நிருபர்)