நானுஓயா பிரதான வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் நானுஓயா பிரதான நகரிலுள்ள கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே இவ்வாறு கொட்டப்படுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர். வீதியோரங்களில் திட்டமிட்டு ஒருசிலர் காய்கறி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் , உடைந்த கண்ணாடிகள், கிருமிநாசி வெற்றுப் போத்தல்கள் போன்றவற்றை கொட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எளிதில் மக்கிப்போகாத பொலித்தீன் பைகளில் கழிவுகளை போட்டு வீசிசெல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நுவரெலியாவிலிருந்து ஹற்றன் நோக்கி பயணிக்கும் சாரதிகள் பெரும் அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர்.
நானுஓயா பிரதான நகரமும் இதனால் மாசடைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மூக்கை மூடியவாறு நடந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிகாட்டுகின்றனர். வீதியோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் அதனை சாப்பிடுவதற்காக கால்நடைகள் பிரதான வீதியில் சுற்றித் திரிவதால் இரவு நேரங்களில் வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் , அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.