அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இருதய நோய்க்காக ” கிளினிக்” வரும் நோயாளிகளுக்கு தேவையான முக்கிய மருந்துகளுக்கு டாக்டர்களால் சிபாரிசு செய்யப்பட்டும் சில மருந்துகளை தனியார் மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளுமாறும் நோயாளிகள் பணிக்கப்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு கூடுதலான பணத்தை மருந்துகளுக்கு செலவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 19ஆம் திகதி இருதய நோய்க்காக “கிளினிக்” வந்த நோயாளிகளுக்கு சுவாச நோய்க்கான “இன்ஹேலர்” மருந்துகள் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் காலை, மாலை தொடர்ச்சியாக பாவிக்க வேண்டிய “இன்ஹேலர்” மற்றும் அவசர நிலைமையின் போது பாவிக்க வேண்டிய “இன்ஹேலர்” உட்பட முக்கிய சில மருந்துகளும் வழங்கப்படவில்லை. இதனால் அதிகாலை 3.00 மணி தொடக்கம் காத்திருந்தும் தாம் ஏமாற்றப்பட்டதாகவும், எம்மில் அனேகமான பணவசதி இல்லாத நோயாளிகள் வெறுமனே வீடு திரும்பும் நிலை ஏற்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையின் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இது விடயத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு பாதிக்கப்பட்ட நோயாளிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
திறப்பனை தினகரன் நிருபர்