கடுவெல நகரில் நிலவும் வாகன நெரிசலை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடுவெல நகரில் நீண்ட காலமாக அதிக வாகன நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.இது குறித்து அவதானம் செலுத்திய அமைச்சர் அப்பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உடுகொட, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலோலுவகே மற்றும் மாகாண பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, கடுவெல நகர ஆணையாளர் திருமதி தில்ருக்ஷி கமகே உள்ளிட்ட அதிகாரிகள், கடுவல வர்த்தக சமூகத்தினர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் சென்றிருந்தனர்.
நகரை அவதானித்து, போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களைக் கண்டறிந்த அமைச்சர், தற்போதுள்ள பஸ்வண்டிகள் நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் அமைக்குமாறு பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.