இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் திறப்புவிழா பக்தி பரவச பெருவெள்ளத்துடன் நேற்று நடைபெற்றது. இராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் பூசை நடத்தினார்.
அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், துறைசார் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோருக்கு அயோத்தி இராமர் கோயில் வடிவத்தை நினைவுப் பரிசாக வழங்கினார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
அயோத்தி இராமர் கோயில் வளாகப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இப்பொதுக் கூட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றனர். அயோத்தி இராமர் கோயிலில் பிரதிஷ்டை வழிபாட்டுக்கு பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் பிரதமர் மோடி. சாதுக்கள் புடைசூழ பிரதமர் மோடிக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட இராமர் கோயிலில் பால இராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுகள் நண்பகலுக்கு சற்றுப் பின்னர் நிறைவடைந்தன.
அயோத்தி இராமர் கோயில் கருவறை பால இராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் இராமர் கோயில் கருவறை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது; முன்னதாக இராமர் கோயில் கருவறையில் பால இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிராண பிரதிஷ்டை சிறப்புப் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்
பால இராமர் சிலை மலர்கள், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலை திறப்பை தொடர்ந்து பிரதமர் மோடி பூஜைகள் செய்தார். இராம பஜனை பாடல்கள் அப்போது பாடப்பட்டன. இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது இராணுவ ஹெலிெகாப்டர்கள் பூமழை தூவின.
பிரதமர் மோடி, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் சிறப்பு பூஜை நடத்தினர். முன்னதாக பால இராமர் சிலைக்கு சக்தியூட்டும் பூஜை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.