மலையக பெருந்தோட்டப் பகுதியில் ஏற்றுமதிப் பயிர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் காணிகள் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அது தொடர்பில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அது தொடர்பாக வசதிகளை பெற்றுக்கொடுக்கும் புதிய சட்டமொன்றை கொண்டு
வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபையில் தெரிவித்த அவர், இந்த திட்டத்தின் மூலம் பெருமளவு வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வேலுகுமார் எம்.பி. முன்வைத்த பெருந்தோட்டத்துறை சம்பந்தமான தனிநபர் பிரேரணை மீதான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர்,
புதிய பெருந்தோட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் பங்கேற்புடன் ஏற்றுமதி செய்யக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்காக 300 ஏக்கரைக் கொண்ட காணி குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேர்மையான விதத்தில் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பெருமளவு வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படும். இந்த விவசாயக் காணியை குத்தகைக்கு விடுவதற்கான வசதிகளை வழங்குவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காணிகளை இனம் காணுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பான அடிப்படை வரைபு அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்