பப்புவா நியூகினியாவில் பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்ததை அடுத்து நாட்டின் இரு பிரதான நகரங்களில் இடம்பெற்ற கலவரங்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் குழுவொன்று சம்பளப்பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தலைநகர் போர்ட் மொரேபியில் நேற்று முன்தினம் மாலை கலவரம் வெடித்தது.
இதன்போது கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு கடைகள் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரம் 300 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் லயி நகருக்கும் பரவியது. இந்த சட்ட ஒழுங்கற்ற சூழல் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் ஜேம்ஸ் மராபே நேற்று உறுதி அளித்தார்.
இதில் கடைகள், பேரங்காடிகளுக்குள் புகுந்தவர்கள் அங்குள்ள பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சந்தர்ப்பவாதிகளே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த இராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னறிவித்தல் இன்றி சம்பளம் நிறுத்தப்பட்டதை அடுத்து பப்புவா நியூகினிய பாராளுமன்றத்திற்குள் பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அதிருப்தி அடைந்திருக்கும் மக்களே கலவரத்தில் ஈடுபட்டிருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.