இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கு ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததோடு, இஸ்ரேல் ஐ.நா இனப்படுகொலைக்கு எதிரான சாசனத்தை மீறியதாக வழக்கை தொடுத்த தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியது.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா கோரிக்கை விடுத்தது. இதனை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
“ஒரு நாட்டின் மீதான எந்த ஒரு தாக்குதலும், அது எவ்வளவு தீவிரமாக இருந்தபோதும், இந்த சாசனத்தை மீறுவதை நியாயப்படுத்தவோ அல்லது பாதுகாக்கவோ முடியாது” என்று தென்னாபிரிக்க நீதி அமைச்சர் ரொனால்ட் லமோலா குறிப்பிட்டார். ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்தது.
1948 ஆம் ஆண்டு ஹோலோகாஸ்ட் படுகொலையை தொடர்ந்து கையொப்பமிட்ட உடன்படிக்கையான ஐ.நா. இனப்படுகொலை சாசனத்தை இஸ்ரேல் மீறி இருப்பதாகவே தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று ஆரம்பமான இந்த வழக்கு விசாரணை இன்றும் தொடரவுள்ளது.