பதுளை–கொழும்பு பிரதான வீதியின் உடுவர ஹத்த கன்வன்வ பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. இப்பாரிய மண்சரிவு நேற்று முன்தினம்
இரவு ஏற்பட்டது.இதனால், இவ்வீதியூடான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வீதியை கடந்து பதுலு ஓயாவில் விழுந்த மண் சரிந்ததால், அந்த இடம் முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ளது. தற்போது பதுளையிலிருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையிலிருந்து உடுவர வரையிலும் பஸ் சேவை நடைபெறுகிறது. அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலயால் நேற்றிரவு பெய்த அடை மழையால், வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொறகஸ் ரேந்தபொல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்திதில் அவ்வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக வெளிமடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பண்டாரவளை தந்திரிய பிரதேசத்திலும் மண் சரிவு ஏற்பட்டதில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
பதுளை பிரதேசத்தில் பெய்து வரும் அடை மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கும் இடர் முகாமைத்துவ மையம், தாழ்வான பிரதேசங்களிலும் மலைப்பாங்கான இடங்களிலும் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
(ஹற்றன் சுழற்சி, ஊவா சுழற்சி நிருபர்கள்)