Home » வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கு இருநாள் வதிவிட செயலமர்வு
வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில்;

வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கு இருநாள் வதிவிட செயலமர்வு

by damith
January 9, 2024 9:51 am 0 comment

வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) என்பன இணைந்து நடத்திய வடமேல் மாகாண அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் வதிவிட செயலமர்வொன்று குருநாகல் ‘Kandiyan Reach Hotel’ இல் இடம்பெற்றது.

ஊடக பணியாளர்களின் திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறந்த எழுத்து மற்றும் பயனுள்ள அறிக்கையிடலுக்கு ஊடகவியலாளர்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த இரண்டு நாள் வதிவிட செயலமர்வு வெகுசன ஊடக அமைச்சின் அபிவிருத்தி பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டபிள்யூ. பி.செவ்வந்தி தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

செயலமர்வின் முதலாவது நாளான சனிக்கிழமை (05) வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்த செயலமர்வில் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஜயசுந்தர, அமைச்சின் தலைமை உள்ளக கணக்காய்வாளர் ஆர்.எம்.ஜயந்த ரஸ்னாயக்க, சட்ட அதிகாரி சட்டத்தரணி டி.பி. உரேகா வெலரத்ன உட்பட வெகுசன ஊடக அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரன, சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க, சுயாதீன தொலைக்காட்சி தலைவர் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன ஆகியோர் செயலமர்வில் வளவாளர்களாக கலந்துகொண்டு இரண்டு நாட்களும் சிறப்பான முறையில் செயலமர்வை வழிநடத்தினார்கள்.

இந்த செயலமர்வில் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

குற்றவியல் அறிக்கையிடல் பற்றி வழக்கு ஆய்வு (case study) மூலம் தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஊடக அறிக்கையிடலின் போது எவ்வாறு ஒழுக்க நெறிகளை பேணுவது என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்தல், தவறான தகவல்களை வெளியிடுதல் மற்றும் உண்மைத்தன்மையான செய்திகளை அறிக்கையிடல் பற்றி இதன்போது கலந்துரையாடல் மூலம் விளக்கப்படுத்தப்பட்டது.

மேலும், சமூகப் பொறுப்பு வாய்ந்த ஊடகம் என்ற அடிப்படையில் ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஊடகவியலாளர்களின் கடமைகளும், பொறுப்புக்களும் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. இந்த இரண்டு நாள் வதிவிட செயலமர்வில் கலந்துகொண்ட வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கு நாட்குறிப்பேடு, ஊடக மேலங்கி ( Media Jacket) மற்றும் சான்றிதழ் என்பன அதிதிகள் மற்றும் வளவாளர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

கற்பிட்டி தினகரன் விசேட . புத்தளம் தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT