அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம் பளாத்த பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள இனங்காணப்படாத நோய்த்தாக்கத்தினை கண்டுபிடிப்பதற்காக வேண்டி விவசாயத்திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக விவசாயத்திணைக்களத்தின் அநுராதபுரம் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தேனுவர தெரிவித்தார்.
மத்திய நுவரகம் பளாத்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுக்கங்குளம, கல்பொத்தேகம மற்றும் அலயாபத்துவ மாணியங்கமுவ பகுதியிலுள்ள பாரிய அளவிலான அறுவடை செய்வதற்கு அண்மித்துள்ள சோளச் செய்கைக்கே இனங்காணப்படாத நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதென சோளச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயத்திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சோளச்செய்கையினை பரிசோதனை செய்வதற்காக வேண்டி விவசாயத்திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தேனுவர மேலும் தெரிவித்தார்.
(அநுராதபுரம் தினகரன் நிருபர்)