- அந்நிய செலாவணியாக நாட்டுக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு
- 2023 இல் 07 பில்லியன் ரூபாவை பணியகம் திறைசேரிக்கு வழங்கியிருப்பதாகவும் அறிவிப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கடந்த வருடத்தில் திறைசேரிக்கு ஏழு பில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தாம், தொழில் அமைச்சராக பதவியேற்ற 2022 மே மாதத்திலிருந்து இதுவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலம் 8 .72 பில்லியன் டொலர்கள் அந்நிய செலாவணியாக நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர் கடந்த 2023 டிசம்பர் மாதம் மாத்திரம் 569.7 மில்லியன் டொலர்களை நாட்டுக்கு அந்நிய செலாவணியாக அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையரின் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக தெரிவித்துள்ள அமைச்சர், அவர்களின் முன்னேற்றத்துக்காக இவ்வருடத்திலும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், கடந்த வருடத்தில் திறைசேரிக்கு 07 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொடுத்துள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியை கவனத்திற் கொண்டு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொள்வனவு, அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்களுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடவடிக்கைகளின் மேலதிக நிதியிலிருந்து இந் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்