காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் திகதியில் நடைபெறும் என்று ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கிற்கு துருக்கி மற்றும் மலேசிய நாடுகள் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதேநேரம் இந்த வழக்கை நிராகரித்திருக்கும் அமெரிக்கா, “தகுதியற்ற, எதிர்மறையான மற்றும் முழுமையாக எந்த ஒரு அடிப்படையும் அற்றது” என்று குறிப்பிட்டுள்ளது. காசா மீது தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 22,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.