அரசியல் தீர்வு, நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் அர்த்த புஷ்டியான நகர்வுகளை முன்னெடுத்து இலங்கை வாழ் தமிழர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வென்றெடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை (04) வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு, தமிழ்
அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் வடக்குக்குக்கான உத்தேச விஜயமும் செயற்பாட்டளவில் அமைந்தால், ஒத்துழைப்பை வழங்குவோம்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தலைவர்கள் இணைந்து கூறினால் வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து பரசீலிப்னபேன் .
வழமையாக ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்யும் போது அவரை சந்தித்து தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவேன். ஆனால் இம்முறை சுகயீனம் காரணமாக ஜனாதிபதியை சந்திப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை. நல்லிணக்கம் தொடர்பில் ஒவ்வொருவராலும் காலம் காலமாக பேசப்பட்டு வருகின்றதே தவிர, எவரும் அதனை நடைமுறையில் செய்ய முடிக்கவில்லை. ஒரு தரப்பினர் ஒரு யோசனையை முன்வைக்கும் போது மறுபுறம் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் அதனை எதிர்க்கும் நிலைமையே காணப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி அதனை நடைமுறை சாத்தியமாக்கினால், அதை நாம் வரவேற்போம். ஆனால் அது எந்த முறையில் செய்யப்படும் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. மார்ச்சில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என்றால், அதற்கு முன்னர் தேர்தலுக்கான அறிவிப்புக்கள் வெளியாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.