கல்வி அமைச்சினால் தரம் 3 அதிபர் சேவைக்கு அண்மையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிபர்கள் தங்களது ஒரு மாதகால சேவை முன்பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தெஹியத்தகண்டிய வலயத்திற்குட்பட்ட மாதிரி ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளை தரிசிப்பதற்கான ஒரு நாள் களப்பயணம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட அதிபர்களை பாடசாலைகளில் அதிபர்களாக, பிரதி அதிபர்களாக மற்றும் உதவி அதிபர்களாக இடமமர்த்துவதற்கு முன்னர் மாதிரிப் பாடசாலைகள் தொடர்பான களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு அதனூடாக குறித்த பாடசாலைகளில் செயல்படுத்தப்படுகின்ற தனித்துவம் வாய்ந்த பல்வேறு வேலைத்திட்டங்கள், செயற்திட்டங்கள் போன்றவற்றினூடாக புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களை வலுப்படுத்தும் நோக்கிலும் இன நல்லிணக்கத்தினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.
இலங்கையில் வேறு எந்த வலயக் கல்வி அலுவலகத்தில் பயிற்சி பெற்றிருந்த புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு இவ்வாறான களப்பயணம் இடம்பெறாத போதிலும் கூட தெஹியத்தகண்டிய வலய கல்விப் பணிப்பாளர் துமிந்த பீரிஸ் அவர்களுடன் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த அரிய வாய்ப்பு தங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை வலய கல்வி பணிப்பாளரின் அர்ப்பணிப்பான சேவை தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு புதிதாக நியமிக்கப்பட்டவர்களை மேலும் அத்துறையில் வலுவூட்டும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற அத்தனை நடவடிக்கைகளுக்கும் வலயக்கல்வி பணிப்பாளருக்கு உறுதுணையாக இருப்பதற்கும் ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் ஆயத்தமாகவுள்ளோம் என புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் துமிந்த பீரிஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து இக்களப்பயணத்தின் போது இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்)