சவூதி அரேபியா உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட சேவைகளை முஸ்லிம்களுக்கு செய்து வருவது வெளிப்படையான ஓர் அம்சமாகும். அச்சேவைகளில் குறிப்பிட்டு கூறத்தக்க, சிறப்பான ஒரு விடயமாக மதீனாவில் உள்ள ‘மன்னர் பஹ்த் அல்குர்ஆன் அச்சக வளாகம்’ (king Fahd Quran complex) திகழ்கின்றது.
தற்கான அடிக்கல் 1982 இல் நடப்பட்டு 1985 ஆம் ஆண்டு மன்னர் பஹ்த்தினால் மதீனாவில் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவின் போது மன்னர் பஹ்த் பேசுகையில் “இன்றைய நாளில் சிறந்ததொரு கனவு நிறைவேறியதாக நான் உணர்கின்றேன். இதனூடாக எனது மார்க்கத்திற்கும்,நாட்டிற்கும், முழு உலக முஸ்லிம்களுக்கும் சேவை செய்ய இறைவனிடம் ஆதரவு வேண்டுகின்றேன்” எனக் கூறியிருந்தார்.
இவ்வச்சகம் அல்குர்ஆனுக்கு செய்யப்பட்ட மிகப் பெரும் சேவையாகவும், மதீனாவின் மிகப் பெரும் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. இங்கு 70 இற்கும் அதிகமான மொழிகளில் அல்குர்ஆன் மொழிபெயர்க்கப்படுவதுடன், வருடாந்தம் 18 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் வெளியிடப்படுகின்றன. மேலும் இதனூடாக உலகின் பல்வேறுபட்ட மொழிகளில் அல்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுவது விசேட அம்சமாகும். இதில் 39 ஆசிய மொழிகள்,16 ஐரோப்பிய மொழிகள்,19 ஆபிரிக்க மொழிகள் உள்ளடங்குகின்றன. அத்தோடு காலத்திற்குக் காலம் தேவையுணர்ந்து மொழிபெயர்ப்புப் பணியில் ஒவ்வொரு நாட்டு மொழிகளும் சேர்க்கப்படுகின்றன. உலகின் பிரபல்யமாக ஓதப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட கிராத் வகைகளிலும் குர்ஆன் அச்சிடப்பட்டு வெளியிடப்படுவது இன்னுமோர் சிறப்பம்சாகும்.
மேற்கூறப்பட்டவைகளுடன் சேர்த்து குர்ஆன், ஹதீஸ் சம்பந்தமான ஆய்வுகளும் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. இதனை சவூதி அரேபிய இஸ்லாமிய அலுவல்கள், அழைப்பு, வழிகாட்டல் அமைச்சு மேற்பார்வை செய்கின்றது.
அச்சிடப்பட முன்னும் அதன் பின்னும் நிபுணத்துக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட பின்னரே பிரதிகள் வெளியிடப்படுகின்றன. இதனால் சிறிதளவு அச்சுப்பிழை கூட வருவதற்கான வாய்ப்பே இல்லை.
உண்மையில் எமது நாட்டில் கூட பெரும்பாலான வீடுகளில் இதில் அச்சடிக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகள் இல்லாமலிருக்காது. வருடா வருடம் ஹஜ்ஜூக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் இதன் அல்குர்ஆனிய பிரதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
உம்ரா,ஹஜ் பயணங்கள் மேற்கொள்வோர் மதீனாவின் ஓர் அடையாளமாகத் திகழும் இக்கட்டடத்தை தாராளமாக பார்வையிடுவதற்கான அனுமதியையும் அச்சகத்தின் நிர்வாகம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.