காசா மீதான இஸ்ரேலின் போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் நிலையில் தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பும் சிரியாவில் இருந்து ஈரான் ஆதரவு போராளிகளும் இஸ்ரேலின் வட பகுதி மற்றும் கோலன் குன்றை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லெபனானுடனான எல்லையை ஒட்டி இருக்கும் இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது கடந்த வியாழக்கிழமை (07) பத்து தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது. இதில் மட்டாடிக் இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிக்கு அருகில் நடத்தப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் கோலன் குன்றின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான புகாதா மீது சிரியாவில் இருந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
கடந்த வியாழனன்று வடக்கு இஸ்ரேலில் உள்ள துருப்புகளை சந்தித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லா தவறிழைத்தால் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானை தமது படை காசா மற்றும் கான் யூனிஸாக மாற்றிவிடும் என்று எச்சரித்திருந்தார். இதனை அடுத்தே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.