வடக்கு, கிழக்கில் இந்து ஆலயங்கள் விரைவில் புனரமைப்பு
தமிழ் மக்களை நாம் புறக்கணிப்பதில்லை, இனிமேல் புறக்கணிக்கப் போவதுமில்லையென தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் தொன்மை வாய்ந்த இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
அரசாங்கம் மற்றும் அமைச்சுகள் மதம் மற்றும் மொழி அடிப்படையில் எவரையும் மலினப்படுத்துவதில்லை.பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 09 ஆவது உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அச்சமடைந்துள்ளதை அறிய முடிகிறது. அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் போது, ஏனைய மதங்களை இரண்டாம் பட்சமாக்க வேண்டுமென எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. சகல மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொன்மை வாய்ந்த இந்து கோயில்களை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகார திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்