மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் புதன்கிழமை (29) உத்தரவிட்டார். கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நபர் நீதிமன்ற வழக்கொன்றில் ஆஜராகாததால் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் மயங்கி வீழ்ந்தார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் புதன்கிழமை (29) சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.