கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச மட்ட வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கால அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (13) திங்கட்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்ணேந்திரன் தலைமையில் இக்கலந்துரையாடல் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா பருவமழை மற்றும் இதனால் இப்பிரதேசத்தில் எதிர்வுகூறக் கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து, உள்ளூராட்சிமன்ற அதிகார சபைரீதியான அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேச திட்ட நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும், வடகீழ் பருவப் பெயர்ச்சி பருவ மழையின்போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக, துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக கால்வாய்களை மீள் செப்பனிடல் மற்றும் கட்டாக்காலி மாடுகள், நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இதன்போது அனர்த்தங்களின் போது மக்களை பாதுகாப்பதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச கடற்படை பிரிவு அதிகாரி, துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
(பரந்தன் குறூப் நிருபர்)