சிரியாவில் ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை மற்றும் ஈரான் ஆதரவுக் குழுக்கள் பயன்படுத்தும் இரு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றதை அடுத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
“அமெரிக்கா மோதலை எதிர்பார்க்கவில்லை என்பதோடு மேலும் மோதலில் ஈடுபடவும் திட்டமிடவில்லை.
எனினும் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரான் ஆதரவு தாக்குதல் ஏற்க முடியாதது மற்றும் நிறுத்தப்பட வேண்டும்” என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் வியாழக்கிழமை (26) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டணிகள் மீது ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்களால் இந்த மாதத்தில் குறைந்தது 16 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 21 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் வெடித்ததை அடுத்தே பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
“தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன” என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமைனிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.