எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்கும் எத்தகைய தீர்மானமும் பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் வாய்ப்புண்டென தெரிவித்துள்ள அவர், இவ்வாறான ஒன்றை நாட்டின் இத்தகைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் பலத்திலேயே தங்கியுள்ளது. நெருக்கடியிலிருந்து மெதுவாக நாடு மீண்டுவருகிறோம். இந்நிலையில் அரசாங்கத்திற்கான ஒத்துழைப்பை வாபஸ்பெறுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம் மேற்கொள்ளாது.
அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பு நடவடிக்கைகளிலும்முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம் குறித்த பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ள கூற்று சம்பந்தமாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அமைச்சர்களை அரசாங்கத்திலிருந்து நீக்கினால் பொதுஜன பெரமுனவால் மேற்கொள்ளக்கூடிய பல விடயங்கள் உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)