புத்தளம் – கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடி தொழிநுட்பக் கட்டடம் நேற்று முன்தினம் (11) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் ஏ.கே. நயீமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் உட்பட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.”அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த இருமாடி தொழிநுட்பக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட குறித்த தொழிநுட்பக் கட்டடத்தை வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது புத்தளத்தில் மிகவும் பழமைவாய்ந்த கிராமமான கரைத்தீவு (பொன்பரப்பி) முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தை செப்பனிடுவதற்காக வனாத்தவில்லு பிரதேச சபை, புத்தளம் நகர சபை ஆகியவற்றின் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதாக இங்கு குறிப்பிட்டார்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்