புத்தளம் – மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்திலுள்ள பிரபல தனியார் வர்த்தக வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (07) இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது, மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கருகிலுள்ள தனியார் ஏ.டி.எம் இயந்திரத்துக்கு மோட்டார் சைக்கிளில் மூவர் முகங்களை மறைத்து மிகவும் சாதாரணமாக வருகை தந்தமை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
அங்கு வருகை தந்த கொள்ளையர், ஏ.ரி.எம். இயந்திரம் பழுது என்றும் அதனை திருத்தப்போவதாகவும் கூறி, எவ்விதமான பதற்றமுமின்றி, திறப்பு ஒன்றின் மூலம் ஏ.ரி.எம். இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனையடுத்து, இரகசிய இலக்கங்களை உட் செலுத்தி ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தில் இருந்த சுமார் ஒரு கோடிக்கு அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துணிகரமான கொள்ளைச் சம்பவத்தில் ஏ.ரி.எம். இயந்திரத்திரத்திற்கோ அல்லது பாதுகாப்பு அறையின் கதவுக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏ.ரி.எம். இயந்திரம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கள் இடம்பெற்றிருந்த வேளையிலேயே, கொள்ளையர்கள் இந்த துணிகர சம்பவத்தை நடத்தியுள்ளனர்.மக்களுக்கும், பொலிஸாருக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் வங்கியுடன் தொடர்புடைய ஒருசிலரின் உதவியுடன் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்)