உலகக் கிண்ண ஆரம்பப் போட்டி நடந்த அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கு பார்வையாளர்கள் இன்றி காலியாக இருந்தது பலரது அவதானத்தை பெற்றுள்ளது.
1 லட்சத்து 32 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில், எத்தனை இருக்கைகள் நிரம்பியிருந்தன என்பது பற்றிய சரியான எண்ணிக்கை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், போட்டியின் காட்சிகளிலும், புகைப்படங்களிலும் பல இருக்கைகள் காலியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
போட்டி நடந்தது வாரத்தின் மத்தியில், பிற்பகல் நேரத்தில். அதேபோன்று இந்தியா விளையாடாததாலும் போட்டிக்கு குறைவான ஆட்களே திரண்டிருந்ததாக கூறப்பட்டது.
சிலரின் கூற்றுப்படி, அஹமதாபாத்திற்குப் பதிலாக மும்பை வான்கடேவில் போட்டியை நடத்தியிருந்தால், இது போன்ற ஒரு சூழ்நிலை வந்திருக்காது என்று குறிப்பிடப்படுகிறது.
எனினும், ஒக்டோபர் 14ஆம் திகதி இதே அரங்கில் நடைபெறவிருக்கும் இந்தியா– பாகிஸ்தான் போட்டிக்கு மைதானம் முழுவதும் நிரம்பி வழியும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் நரேந்திர மோடி அரங்கு 2020 ஆம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது.
63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. எனவே, 20,000 பார்வையாளர்கள் இருந்தால்கூட, இந்த மைதானம் ஒப்பீட்டளவில் காலியாக இருப்பதுபோலவே தோன்றும்.