சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியுடன் செயற்படுவதாகவும், சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளத் தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக சில தரப்பினர் இச்செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் சபையில் 27/2 ல் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் மார்ச் மாதம் நடுப்பகுதியில் அரசாங்கம் கடன் வசதி தொடர்பில் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக் கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் கடன் நிலையான தன்மையைக் கொண்டிருக்கவில்லையென, அந்த நிதியம் மதிப்பீடு செய்திருந்ததால் நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து அரசாங்கத்தினால் பல கொள்கைகளை முன்னெடுக்க நேர்ந்தது. கடந்த வருடம் செப்டம்பர் முதலாம் திகதி அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகமட்ட பிரதிநிதிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தது. இந்த இணக்கப்பாட்டுக்கு இணங்க பல கொள்கைகளை நடைமுறைப்படுத்த நேர்ந்தது.இதனடிப்படையில் ஒன்பது விடயங்களை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது. முழுமையாக அதனை நிறைவேற்றுவது மற்றும் கடன் வழங்குநர்களின் சான்றுகளை உறுதிப்படுத்துவது, நிலுவை கடன்களை கவனத்திற் கொள்ளாமல் கடன்களை வழங்குவது தொடர்பில் கடன் வழங்கும் நிறுவனங்களின் யோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்புக்காக மூன்று பில்லியன் டொலர் நிலையான கடன் ஒத்துழைப்பை வழங்குவதற்கு 48 மாத வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வருடத்தின் மார்ச் (20) இல்,சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டுக் குழுவின் அனுமதி கிடைத்தது. இந்த அனுமதி கிடைத்த பின்னர் 320 மில்லியன் அமெரிக்கன் டொலர் முதலாவது தவணையாக கிடைத்தது.
ஏழு அடிப்படைகளைக் கொண்டதாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அதனை முழுமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதேவேளை, இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் 10 விடயங்கள் நிறைவு செய்யப்பட்டு, இணக்கப்பாடு காணப்பட்ட 51 விடயங்களில் 47 விடயங்கள் நிறைவு செய்யப்பட்டிருந்தன.
அதற்கிணங்க கடன் மறு சீரமைப்பு உட்பட இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சில கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நேர்ந்துள்ளது. சில மறு சீரமைப்புக்காக பாராளுமன்றத்தின் மூலம் சட்டம் இல்லை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவசியமானது. அந்த வகையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலும் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்பு செயற்பாடுகளை அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடிந்துள்ளது. அதில் சில விடயங்களை நிவர்த்தி செய்வதற்கான கால வரையறை சற்று நீண்டது. காலதாமதம் தொடர்பில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். மத்திய வங்கி சட்டத்தை அறிமுகப்படுத்தல், தேசிய வருமானம் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், மற்றும் ஏனைய கடன்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அனுமதி போன்றவை இதற்குக் காரணமாக அமைந்தன. தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் போது சில தரப்பினர் நீதிமன்றம் சென்றனர். இதனால் எமக்கு உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடிய நிலையுள்ளது. அந்த தீர்ப்பு சபாநாயகருக்கு வழங்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை எம்மால் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடியாதுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)