மராட்டிய மாநிலம் நன்டேத் நகரில் அரசு பொது வைத்தியசாலையில் கடந்த 48 மணி நேரத்தில் 31 நோயாளிகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான நன்டேத் நகரில் உள்ள சங்கர் சவாண் அரசு வைத்தியசாலையில் பத்வானி, ஹிங்கோலி, யவாத்மால் பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவமனையில் போதிய மருந்துகளோ, மருத்துவர்கள், தாதியர்களோ இல்லை என்றும் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 48 மணி நேரத்தில் சிகிச்சைக்கு வந்த 16 பச்சிளம் குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களில் சிலர் பாம்பு கடி மற்றும் பல்வேறு நோய்களுக்காக வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் என்று வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் வாக்கோடே தெரிவித்துள்ளார்.
இதனிடையே மராட்டியத்தில் கடந்த ஓராண்டாக மருத்துவம் உட்பட அனைத்து அரசு துறைகளும் முடங்கி கிடக்கின்றன. அரசு வைத்தியசாலைகளில் 500 நோயாளிகளுக்கே இடமுள்ள நிலையில், 1200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதும் இறப்புக்கு காரணமாக கூறப்படும் நிலையில், இந்த துயர சம்பவம் துரதிஷ்ட வசமானது என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதனை விசாரிக்க 03 பேர் கொண்ட குழுவை அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார். நோயாளிகள் உயிரிழப்பு குறித்து ஆலோசிப்பதற்காக மராட்டிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அரசு வைத்தியசாலையில் 31 பேர் இறந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஒன்றரை மாதத்துக்கு முன்பு தானே மருத்துவமனையில் 18 நோயாளிகள் இறந்த சம்பவத்தின் சோகம் மறப்பதற்குள் மீண்டும் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது