2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சரென்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்தவருடத்துக்கான இந்த வரவு-செலவுத் திட்டம் யோசனையை அன்றைய தினம் முற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பாரென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளார். வரவு செலவு திட்டத்துக்கான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான சபை வாக்களிப்பு, நவம்பர் 21ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ள. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை சபையில் இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)