இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ் குணதிலக்க பாலியல் குற்றச்சாட்டில் கைதானபோது அவுஸ்திரேலிய பொலிஸார் முன் பயத்தில் அழுதுள்ளார்.
குணதிலக்க மீதான வழக்கு நேற்று (20) தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சிட்னி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர் கைது செய்யப்பட்ட பின் பொலிஸார் நடத்திய விசாரணையின் வீடியோ பதிவு காண்பிக்கப்பட்டது.
அதில் பேசுவதற்கு தடுமாறும் குணதிலக்க, கண்ணீரை துடைத்தவாறு நடந்த சம்பவம் பற்றி குறிப்பிடுகிறார்.
குறித்த பெண்ணை ஒபெரா மதுபான விடுதியில் சந்தித்தாகவும் பின்னர் அவரது வீட்டுக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டிருக்கும் குணதிலக்க, பலியல் உறவில் ஈடுபட்ட பின் தமக்கு கடந்த காலத்தை காணும் சக்தி இருப்பதாக அந்தப் பெண் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கண்ணை மூடிய அந்தப் பெண் முன் ஜென்மத்தில் தாம் இருவரும் தாய்லாந்தில் அயலவர்களாக இருந்ததாக தெரிவித்ததாக குணதிலக்க அந்த விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். “அதற்கு பின், நான் சற்று பயந்தேன். அந்த உணர்வு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
அவர் சற்று விந்தையாக காணப்பட்டார்” என்று குணதிலக்க பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சட்டரீதியில் பெயர் வெளியிட தடுக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி சிட்னி நகரில் குணதிலக்கவை சந்தித்த நிலையில் அவர் அனுமதி இன்றி ஆணுறையை அகற்றிவிட்டு பாலுறவில் ஈடுபட்டதாகவே குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டை குணதிலக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையில் குணதிலக்கவின் வழக்கறிஞர் முருகன் தங்கராஜ் குணதிலக்கவுடன் முதலில் பேசிய இரு பொலிஸாரிடமும் குறுக்கு விசாரணை நடத்தினார்.
டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை அணி நாடு திரும்புவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் கடந்த நவம்பர் 6 ஆம் திகதி காலை குணதிலக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸார் அவரது பைகள் மற்றும் அறையை சோதனையிட்டபோது அவரது ஐபோனை பறிமுதல் செய்ததோடு பயன்படுத்தப்படாத இரு ஆணுறைகளையும் கண்டுபிடித்துள்ளனர்.
நீதிபதி சாரா ஹுக்கட் முன்னிலையில் இடம்பெற்றும் இந்த வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.