ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று, பாராளுமன்ற கட்டிடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் டிரான் அலசுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனும் கலந்து கொண்டதுடன் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தெளிவுபடுத்தும் இந்த நிகழ்வில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்