கட்டுபெத்த CTB வேலைத்தளத்துக்கு அமைச்சர் பந்துல விஜயம்
பழுதடைந்த காரணத்தால் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 50 சொகுசு பஸ் வண்டிகள் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுமென போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த பஸ் வணடிகள் பழுதடைந்துள்ளதால் நாளொன்றுக்கு 50 இலட்சம் ரூபா வருமானத்தை இலங்கை போக்குவரத்து சபை இழப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் பந்துல குணவர்த்தன, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கட்டுபெத்த அதிசொகுசு சுற்றுலா போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் பஸ் வண்டி வேலைத்தளத்துக்கு விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
பல்வேறு தொழினுட்பக் குறைபாடுகள், உதிரிப் பாகங்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் தற்போது இயங்காது 50க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகள் இந்த வேலைத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதை அமைச்சர் பார்வையிட்டார். நாளாந்தம் இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு இலாபத்தை, இல்லாமல் செய்யும் இந்த பஸ் வண்டிகளை விரைவாக திருத்தி மீண்டும் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசகராக பொறியியலாளர் குசான் வேகொடபொல நியமிக்கப்பட்டுள்ளார்.