* பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு இல்லாதோருக்கு ஒரே நாளில் சட்டரீதியான பதிவு வழங்கி வைப்பு
* உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சரும் பங்கேற்பு
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சும், பதிவாளர் நாயகம் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட நடமாடும் சேவையொன்று நேற்று முன்தினம் (12) புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் ஆனந்த வன்னிநாயக்க, பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க, புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் , புத்தளம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதன்போது புத்தளத்தில் பிறப்பு , இறப்பு மற்றும் திருமண பதிவு இல்லாதவர்களுக்கு ஒரே நாளில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன.
மேலும், சுமார் 45 வருடங்களுக்கும் மேல் சட்டரீதியாக திருமணப் பதிவு செய்துகொள்ளாமல் வாழ்ந்த வயோதிப குடும்பம் ஒன்றுக்கு இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த மற்றும் பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க ஆகிய இருவரும் சாட்சிகளாக ஒப்பமிட்டு திருமணப் பதிவை பெற்றுக்கொடுத்தனர்.
குறித்த நடமாடும் சேவை மூலம் பிறப்பு , இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ் இல்லாத 300 பேருக்கு மேற்படி சேவைகளினூடாக ஒரே நாளில் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதேவேளை, பிறப்புச் சான்றிதழ் இல்லாத 14,000 பேருக்கு விஷேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு நடமாடும் சேவை மூலமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த இதன்போது தெரிவித்தார்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்