பாணந்துறை, பெண்கள் வைத்தியசாலை டாக்டரின் காணாமற்போன சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியொன்றை ஆறாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் பாணந்துறை தெற்கு பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் உபுல் பிரியங்கரவின் ஆலோசனையின் பிரகாரம் விஷேட தொழில்நுட்ப தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது காணாமல்போன கையடக்க தொலைபேசி பாணந்துறை நகர் பிரதேசத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தொலைபேசியை தன்னகத்தே வைத்திருந்த பெண் ஒருவரை விசாரணை செய்த பொலிஸார் அந்த பெண்ணிடமிருந்து தொலைபேசியை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருளுக்கு அடிமையான நபரொருவரிடமிருந்து ஆறாயிரம் ரூபாவுக்கு வாங்கியமை தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், போதைப் பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் நபரைத்தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கையடக்க தொலைபேசியைப் பறிகொடுத்த வைத்தியர், கடமை முடிந்த பின்னர் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த சந்தேக நபர் தொலைபேசியை களவாடியுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வருவதாக பொலிசார் மேலும்தெரிவித்தனர்.
பாணந்துறை மத்திய குறூப் நிருபர்