பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்காக குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கமைய 2023 முதல் 2028வரை ஐந்தாண்டுத் திட்டமொன்று தேசிய பால் உற்பத்திக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பால் பண்ணைகளை முகாமைத்துவம் செய்வதனூடாக உற்பத்தித்திறனை மேம்படுத்தல், புற்தரைகளை பாதுகாத்தல் மற்றும் அதிக போசாக்குள்ள புல் வகைகளை பயிரிடுதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச கால்நடைப் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதுடன், இந்தத் தொழில்த்துறையின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்புகளை வழங்கும் தனியார் கால்நடைப் பண்ணைகளை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அதிகளவில் பால் தரக்கூடிய கறவைப் பசு இனங்களை தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்யவும் எமது நாட்டுச் சூழலுக்கேற்ற கறவை பசுக்களை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கு இணையாக எமது நாட்டுக்கு தேவைக்கான ஆட்டுப் பால் உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை செயற்படுத்தி வருவதாகவும், கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.