மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ்விற்கு எதிராக எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்பாராத வகையில் முன்னிலை பெற்ற நிலையில் இந்தத் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு சென்றுள்ளது.
இந்த தீவு நாட்டில் அதிக செல்வாக்கு செலுத்தும் இந்தியா மற்றும் சீன நாட்டின் அவதானத்திற்கு மத்தியிலேயே கடந்த சனிக்கிழமை (09) இந்தத் தேர்தல் இடம்பெற்றது.
அனைத்து வாக்குச் சீட்டுகளும் எண்ணப்பட்ட நிலையில் தலைநகர் மாலேவின் ஆளுநரான முஹமகு முயிசு 46 வீத வாக்குகளை வென்றதோடு சோலிஹ் 39 வீத வாக்குகளை வென்றுள்ளார்.
எனினும் இருவரும் இரண்டாவது சுற்று தேர்தலை தவிர்ப்பதற்கு தேவையான 50 வீத வாக்குகளை வெல்ல தவறினர்.
இதில் மாலைதீவில் இந்தியாவின் இருப்பை கட்டுப்படுத்துவதான வாக்குறுதியுடனேயே 45 வயதான முயிசு தேர்தலில் குதித்தார். அவரது மாலைதீவு முன்னேற்ற கட்சி சீனாவுடன் நெருக்கம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
நாட்டில் நிலைகொண்டிருக்கும் இந்திய இராணுவத்தை அகற்றுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் 2018 ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டி இருந்த 61 வயதான பதவியில் இருக்கும் ஜனாதிபதி சொலிஹ், இந்திய ஆதரவு நிலைப்பாட்டை பெற்றவராவார். அவரது அரசு இந்தியாவின் பெருந்தொகை நிதியில் நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முயிசு மற்றும் சோலிஹ் இடையிலான இரண்டாவது சுற்று ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த சனிக்கிழமை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 75 வீதமான 283,395 பேர் தமது வாக்குகளை அளித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது மாலைதீவு வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற மிகக் குறைவான வாக்குப் பதிவாகும்.