Wednesday, May 15, 2024
Home » கடைசி சுற்றுப் போட்டிகள் திட்டமிட்டபடி கொழும்பில்

கடைசி சுற்றுப் போட்டிகள் திட்டமிட்டபடி கொழும்பில்

ஆசிய கிண்ணம்:

by gayan
September 7, 2023 4:37 pm 0 comment

ஆசிய கிண்ண தொடரின் கடைசி ஐந்து போட்டிகளையும் திட்டமிட்டபடி கொழும்பிலேயே நடத்துவதற்கான முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தயக்கத்துடன் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் போட்டிகளை ஹம்பாந்தோட்டைக்கு மாற்றாமல் கொழும்பிலேயே நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கௌன்சில் எடுத்துள்ள முடிவுக்கு பாகிஸ்தான் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின்படி அடுத்த பத்து தினங்கள் கொழும்பில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையிலேயே போட்டிகளை ஹம்பாந்தோட்டைக்கு மாற்ற போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் திட்டமிட்டது.

எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை பின்னேரம் ஆசிய கிரிக்கெட் கௌன்சில் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், முன்னர் திட்டமிட்டபடியே போட்டிகள் கொழும்பில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் பாகிஸ்தானிடம் ஆலோசிக்காது இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து பாக். கிரிக்கெட் சபை அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த முடிவு எடுக்கப்பட்ட விதம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டு பாக். கிரிக்கெட் சபை, ஆசிய கிரிக்கெட் கௌன்சில் தலைவர் ஜெய் ஷாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதேபோன்று ஆசிய கிரிக்கெட் கௌன்சிலின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தை கூட்டும்படி ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தது. எனினும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தீவிர முடிவு எடுப்பதை தவிர்த்துக்கொண்டுள்ளது.

இதன்படி ஆசிய கிண்ணத்தின் எதிர்வரும் செப்டெம்பர் 09, 10, 12, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறும் சுப்பர் போஃர் போட்டிகள் மற்றும் 17 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டி அனைத்தும் திட்டமிட்டபடி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘அதிகமான ரசிகர்கள் கொழும்பில் போட்டிகளைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக கொழும்பில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக திட்டமிட்டபடி கொழும்பில் போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கௌன்சில் முடிவெடுத்துள்ளது’ என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில், இலங்கையில் நடைபெற்ற 84 ஒருநாள் போட்டிகளில் 79 போட்டிகள் முழுமையாக நடைபெற்றதாக ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், கைவிடப்பட்ட 5 போட்டிகளில், செப்டெம்பர் மாதத்தில் கைவிடப்பட்ட ஒரே போட்டி சனிக்கிழமை நடைபெற்ற போட்டிதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT