உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி பதவி நீக்கியுள்ளார்.
உக்ரைன் மீது 2022 பெப்ரவரியில் ரஷ்யா படையெடுப்பதற்கு முன்னர் இருந்து ரெஸ்னிகோவ் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் புதிய அணுகுமுறைக்கான நேரம் வந்துவிட்டது என்று செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புதிய பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு உக்ரைனிய அரச சொத்து நிதியத்தை நிர்வகிக்கும் ருஸ்டெம் உமெரொவ்வை ஜனாதிபதி செலன்ஸ்கி பரிந்துரைத்துள்ளார்.
அதற்கு உக்ரைன் பாராளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
உக்ரைனில் போர் வெடித்தது தொடக்கம் அதிகம் அறியப்பட்ட ஒருவராக 57 வயது ரெஸ்னிகோவ் இருந்து வந்ததோடு உக்ரைனின் மேற்கத்திய கூட்டாளிகளுடனான சந்திப்புகளில் தோன்றுபவராகவும் ஆயுத உதவிகளை பெறுவதில் முக்கியமானவராகவும் இருந்து வந்துள்ளார்.
இருப்பினும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சில் ஊழல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெஸ்னிகோவ் அவற்றை மறுத்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யாவின் பிடியில் உள்ள பகுதிகளை மீண்டும் தன் வசப்படுத்திக்கொள்ளப் பதிலடித் தாக்குதல்களில் இறங்கியுள்ளது.