சினோபெக் எனர்ஜி லங்கா – சினோபெக் குழுமத்தின் செயற்பாட்டு நிறுவனம் உத்தியோகபூர்வமான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொழும்பிலுள்ள மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், பெற்றோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு 3 ரூபா விலைக்கழிவுடன் சினோபெக் முதல் சுற்றுச் சந்தை விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
இதன் விநியோகத் திட்டம் மற்றும் அனைத்து 150 நிரப்பு நிலையங்களும், சினோபெக்கின் நிர்வாகத்திடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் படிப்படியாக ஒப்படைக்கப்படவுள்ளது.
இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தின் போது கடந்த மே மாதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் கையெழுத்திட்டமைக்கமைய, சினோபெக்குக்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான 20 ஆண்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்ய முடியுமென்றும் குறிப்பிடப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கு தரமான பெற்றோலிய பொருட்களின் முதல் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் வந்ததைத் தொடர்ந்து, சினோபெக் முழு வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் விநியோகத்தர் ஒப்பந்தங்களை நிறைவு செய்தது.
நாடு முழுவதும் 150 நிரப்பு நிலையங்களுக்கு சேவை செய்யும் விநியோகச் சங்கிலியை அறிமுகப்படுத்தியது. சினோபெக்கின் இலங்கை சந்தையின் நுழைவு, அதன் ஆற்றல் வழங்கல்களுக்கு அப்பாற்பட்ட முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
சினோபெக் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, அணுகல் மற்றும் நிலைத்தன்மை தொடர்பாக சினோபெக் எனர்ஜி லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருத்துத் தெரிவித்த போது, “சினோபெக்கின் வர்த்தக நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ தொடக்கத்தை இலங்கையில் எங்களின் முதல் உரிமையாளர் நிரப்பு நிலையத்தை ஒப்படைப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்” என்றார்.