கல்முனை பிரதேச செயலக மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் பூர்த்தி செய்த 150 மணித்தியாலயங்களைக் கொண்ட சிங்கள மொழிப் பாடநெறிக்கான பிரியாவிடை மற்றும் இறுதி கலை, கலாசார நிகழ்வு NILET வளவாளர் ஐ.எம்.அபுல் ஹசன் ஒருங்கிணைப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முபஸ்ரினின் தலைமையில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியகத் அலி, கௌரவ அதிதியாக ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.கே.வீரசிங்க, ஓய்வுபெற்ற நைட்டா மாகாணப் பணிப்பாளர் எம்.எச்.சாஜஹான், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிந்தவூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ்,தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் போதனாசிரியர்களான ஐ.எம்.அபுல் ஹஸன், கே.பி.பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் என 76 அரச உத்தியோகத்தர்கள் இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளதுடன் அவர்களது கலை, கலாசார நிகழ்ச்சிகளும் பிரதம அதிதி, கௌரவ அதிதிகள் உரைகளும் இடம்பெற்றன.
நாட்டின் நிருவாகத்துறையினை சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழிவழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையிலும், அரச உத்தியோகத்தர்களை இருமொழிப் பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கிலும், தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்கள பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வாறான பாடநெறிகள் அம்பாறை மாவட்டத்தில் பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பி.எம்.எம்.ஏ.காதர்-…
(மருதமுனை தினகரன் நிருபர்-)