ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள மின்னணு விளம்பர திரை ஒன்றில் ஊடுருவியால் ஆபாசப் படம் கண்பிக்கப்பட்டதை அடுத்து நகரில் உள்ள அனைத்து விளம்பர திரைகளையும் நிறுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பக்தாதில் இருக்கும் பிரதான வீதி ஒன்றின் சந்தியில் உள்ள திரையிலேயே ஆபாசப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் பரவியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் இந்த விளம்பர திரையை நடத்தும் நிறுவனத்துடன் பண விவகாரம் தொடர்பில் பிரச்சினைப்பட்ட தொழில்நுட்பவியலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பழிவாங்குவதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடுருவி பல நிமிடங்களாக ஆபாசப் படத்தை காண்பித்த நிலையில் அந்தத் திரையின் மின்சார வயர் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரின் அனைத்து மின்னணு திரைகளும் ஞாயிறு அணைக்கப்பட்டுள்ளன.