தனது அமெரிக்க மனைவியைக் கொன்றதாக நம்பப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடவர், நள்ளிரவில் புதைகுழி தோண்டியபோது பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காஸிம் கமால் கான் எனும் அவர், லாகூர் நகரில் கைது செய்யப்பட்டார்.
50 வயது டயானா கிறிஸ்தோ கானைக் கொலை செய்ததாக அவர் பின்னர் ஒப்புக்கொண்டதாய் பொலிஸார் தெரிவித்தனர். டயானா அமெரிக்காவைச் சேர்ந்தவராவார்.
ஈமச்சடங்குகளைச் செய்யாமல் ஒருவர் சடலத்தைப் புதைக்க முயல்வதாகப் புதைகுழி தோண்டுபவர் தகவல் தந்ததாக பொலிஸ் அதிகாரி கூறினார். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தபோது சடலம் திறந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது.
கொல்லப்பட்டிருப்பது அமெரிக்க பிரஜை என்பதை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்காவில் நேர்ந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் காஸிம் நாடு கடத்தப்பட்டார்.
அதன் பின் அமெரிக்காவில் இருந்த தமது மனைவியுடனும் மகளுடனும் காஸிமுக்குத் தொடர்பு இல்லை.
காஸிம் அண்மையில் தாம் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகக் கூறி தமது மனைவியை பாகிஸ்தானுக்கு வரவழைத்ததாக நம்பப்படுகிறது. டயானாவின் தலையிலும் கழுத்திலும் காயங்கள் காணப்பட்டன.
மரணத்திற்கான காரணத்தை உறுதிசெய்ய அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.