இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இம்மாத இறுதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதில் ஐ.சி.சி மகளிர் சம்பின்சிப்பின் அங்கமாகவே இலங்கை அணி இங்கிலாந்துடன் ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.
இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அருன்டலில் டி20 பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டி வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஹோவ்வில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி செல்ம்ஸ்போர்டில் செப்டெம்பர் 2ஆம் திகதியும் 3ஆவது போட்டி டெர்பியில் செப்டெம்பர் 6ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
டி20 தொடரை அடுத்து செப்டெம்பர் 9ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி டர்ஹாமில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் அடுத்த இரு போட்டிகளும் செப்டெம்பர் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் முறையே நோதம்டன் மற்றும் லெய்செஸ்டரில் நடைபெறும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி இதுவரை 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியபோதும் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றியீட்டியுள்ளது. இதில் இங்கிலாந்து 15 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. அதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 9 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் இலங்கை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியீட்டியதில்லை.