7 இலட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்து,
1 இலட்சம் ரூபாய் கிடைத்ததாக வேதனை!
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னர் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது மக்களுக்கு வீடு கட்டித் தருவதாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் வவுனியா, நொச்சிக்குளம் தெலுங்கு கிராம மக்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர்.
நொச்சிக்குளம் கிராமத்தில் கிராம மக்களுக்கு 22 வீடுகள் கட்டிக்கொடுக்க, வீடு ஒன்றுக்கு 7 இலட்சம் ரூபாய் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் உறுதியளித்திருந்தார். இதன்படி முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக கிராம மக்களுக்கு 1 இலட்சம் ரூபா தொடக்கம் 3 இலட்சம் ரூபா வரையான தொகையை வழங்கியிருந்தார்.
எனினும் வவுனியா, நொச்சிக்குளம் தெலுங்கு கிராம மக்களுக்கு குறித்த தொகை கிடைக்காததால் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அப்போது வாழ்வாதாரம் கூட இல்லாத இக்கிராம மக்கள், புதிதாக கட்டப்படும் வீடுகளின் அருகே மண் குடிசைகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமைப்பத்திரம் கூட இல்லை.
வீட்டுக் கனவுகளைக் காட்டி தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக இக்கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவர்கள் மிகவும் ஏழ்மையான மக்கள் ஆவர். புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக 1985 ஆம் ஆண்டு நொச்சிக்குளம் தெலுங்கு கிராமத்தை விட்டு வெளியேறிய கிராம மக்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு நொச்சிக்குளம் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். வவுனியா, நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி தயானி பின்வருமாறு தெரிவித்தார்:
“நாங்கள் இன்னும் தகரக் கூரையுடன் கூடிய குடிசைகளில் வாழ்கிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக பூரணப்படுத்தப்படாத வீடுகள் கட்டி வசிக்கிறோம். இந்த அரசிடமிருந்து எங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களது பிரச்சினைகளை பார்க்க யாருமில்லை. அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்தால் நல்லது.
இப்போது நாம் மக்களுக்கு சாத்திரம் கூறி, பணத்தைத் தேடி வாழ முடியாது. எனவே வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிவாரணம் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் பாதை ஏறக்குறைய இரண்டு மைல் தூரம் காடாக உள்ளது. எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்”.
வவுனியா நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் கூறியதாவது:
“வீடுகளைக் கட்டுவதற்கு 750,000 ரூபாவை வழங்குவதாக தேர்தலுக்கு முன்னர் சஜித் ஐயா வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தில் ஐந்து லோட் கற்கள் ெகாண்டுவரப்பட்டு கட்டப்பட்டுள்ளன. எங்களுக்கு மிகுதி கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது ஒரு குடிசையில் இருக்கிறோம். நாங்கள் உண்மையில் ஆதரவற்றவர்கள். நான் ஊனமுற்றவன். ஒரு வேலையும் செய்ய முடியாது. யாரிடமாவது எதையாவது கேட்டு வாழ்கிறேன். இந்த வீட்டின் மிகுதியைக் கட்ட நீங்கள் எங்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும்”.
வவுனியா, நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் கூறியதாவது:
“தெலுங்கு மக்கள் மிகவும் ஏழ்மையான மக்கள். நொச்சிக்குளம் கிராமத்தில் சுமார் 22 குடும்பங்கள் உள்ளன. சஜித் பிரேமதாச ஐயா இருந்த காலத்தில் வீடுகளை கட்டுவதற்கு பணம் கொடுக்கப்பட்டது. சுவர்களைக் கட்டுவது மட்டுமே சாத்தியமாக இருந்தது. இந்த நிலங்களுக்கு உரிமைப் பத்திரம் இல்லை. அந்த நேரத்தில் சாப்பிட வழியில்லை. எமக்கு வீடுகளை கட்டித் தருமாறு கோருகின்றோம். பாம்பாட்டி தொழில் செய்து இனிமேல் சாத்தியமில்லை. ஒரு குழந்தை கல்வி கற்க, கடைக்குச் செல்ல குறைந்தது ஐந்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்”.
இது தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் கே.ஏ.ஜானக தெரிவிக்கும் போது, வவுனியா நொச்சிக்குளம் கிராமத்தில் உள்ள தெலுங்கு மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியதாக தெரிவித்தார்.
அதன்படி, இது தொடர்பான ஏற்கனவே ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமுகாமையாளர் தெரிவித்தார். இது தொடர்பான அறிவித்தல்கள் கிடைத்ததும் வீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.