Tuesday, May 14, 2024
Home » பாராளுமன்றம் ஓகஸ்ட் 08 – 11 வரை கூடும்

பாராளுமன்றம் ஓகஸ்ட் 08 – 11 வரை கூடும்

by Rizwan Segu Mohideen
August 4, 2023 5:51 pm 0 comment
  • ஓகஸ்ட் 08: 2023 அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
  • ஓகஸ்ட் 09: பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதம்
  • ஓகஸ்ட் 10: பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்

பாராளுமன்றம் எதிர்வரும் ஓகஸ்ட் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் 09 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 வரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் 10 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.

அதற்கமைய, உள்ளூராட்சி நிறுவங்களினால் கழிவகற்றப்படுத்தல் ( சமிந்த விஜேசிறி), மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் ( புத்திக பத்திறண), நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் ( திருமதி) கோகிலா குணவர்தன), பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய முறையியலை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை வெளியிடல் (கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம்), இலங்கையில் ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை இடமாற்றம் வழங்கப்படுதல் (கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார) மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நலனோம்புகை வசதிகளை வழங்குதல் (கௌரவ சமிந்த விஜேசிறி) ஆகிய தனியார் உறுப்பினர் பிரேரணைகள் அன்றைய தினம் பிரேரிக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT