நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கார்லிபெக் தோட்டத்தில் தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகிப்பதற்காக இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வான உயரத்தில் உள்ளதால் மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். மரத்தினாலான மின்கம்பங்கள் பழுதடைந்து தாழ்ந்துள்ளதனால் அவ்விடங்களில் உயிராபத்துடன் நடமாட வேண்டியுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கார்பெக் தோட்டத்தில் 250 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மரத்தினாலான மின்கம்பங்களே கடந்த பல வருடங்களுக்கு முன்னர் நடப்பட்டுள்ளன.
குறித்த மின்கம்பங்கள் தற்போது பழுதடைந்து மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதனால், அதில் இணைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் பல வருடங்களான காணப்படுகின்றன.
தேயிலைக் கொழுந்து பறிக்கும் ெதாழிலாளர்கள் தங்களது கைகளை தவறுதலாக உயர்த்தினால் மின்கம்பி கையில் பட்டு மின்தாக்கத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எப்போது மரணபயத்துடனேயே அப்பகுதியில் நடமாட வேண்டியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மின்சாரசபையினருக்கும் ஏனைய அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்த போதிலும், ஒரு சில மின்கம்பங்கள் மாத்திரமே மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய 20 இற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் இதுவரை மாற்றப்படவில்லை என்றும் இதனால் உயிராபத்துக்கள் ஏற்படலாம் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து உரிய கவனமெடுத்து தோட்டத் தொழிலாளர்களின் உயிராபத்தைப் போக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
கே.சுந்தரலிங்கம்…?