ஆசிய கிண்ண தொடருக்கு முன்னதாக இலங்கையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுவது உறுதியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நடத்தும் இந்த ஒருநாள் போட்டிகளின் முதல் இரு ஆட்டங்களும் ஹம்பாந்தோட்டையில் ஓகஸ்ட் 22 மற்றும் 24 ஆம் திகதிகளிலும் மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பில் ஓகஸ்ட் 26 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இந்த தொடரை தொடர்ந்து இரு அணிகளும் ஆசிய கிண்ண போட்டிகளில் ஆடுவதற்காக பாகிஸ்தான் செல்லவுள்ளன. முல்தானில் நடைபெறும் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி மோதவுள்ளன.
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அண்மையில் நிறைவு செய்த நிலையில் தலைவர் பாபர் அசாம் உட்பட கணிசமான பாகிஸ்தான் வீரர்கள் லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று தொடர்ந்து இலங்கையில் தங்கியுள்ளனர். கடந்த ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமான லங்கா பிரீமியர் லீக் ஓகஸ்ட் 20 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
‘இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவது எமது அணி (ஆசிய கிண்ண) போட்டிக்கான மைதானங்கள் மற்றும் தயார்படுத்தல்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்’ என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மிர்வைஸ் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.