தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி போட்டியை நடத்தும் தென்னாபிரிக்காவிடமும் தோற்று இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமான வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை அன்றைய தினத்தில் ஜமைக்காவை எதிர்கொண்டு 25–105 என்ற புள்ளிகளால் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (29) தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட நிலையில் அந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்த தவறியது.
கேப்டவுன் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் கால் பகுதியில் 9–24 என்று பின் தங்கிய இலங்கை வீராங்கனைகள் மற்ற சுற்றுகளிலும் 9–21, 6–23 மற்றும் 8–19 என சரிவை சந்திக்க இறுதியில் 32–87 புள்ளிகளால் தோல்வியை சந்தித்தது.
இந்தத் தோல்விகளுடன் சி குழுவில் கடைசி இடமான நான்காவது இடத்திற்கு சரிந்திருக்கும் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினமாகி உள்ளது.
16 அணிகள் பங்கேற்றிருக்கும் வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் குழு நிலை போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்ற இடங்களை பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.