டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு வெளியில் ‘டென்மார்க் தேசபக்தர்கள்’ என்று அழைக்கப்படும் குழுவொன்று கடந்த திங்கட்கிழமை (24) முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரித்ததற்கு ஈராக் மற்றும் மேலும் சில முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
இந்த தீவிர வலதுசாரி குழு தமது செயலை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி இருந்தது.
இதனை அடுத்து ஈராக் தலைநகர் பக்தாதில் சுமார் 1000 ஆர்ப்பாட்டக்காரர்கள் டென்மார் தூதரகத்தை அடைய முயன்றனர். ஸ்டொக்ஹோமில் குர்ஆனை எரிக்க திட்டமிட்டதை அடுத்து கடந்த வாரம் பக்தாதில் உள்ள சுவீடன் தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தமை குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் மற்றும் சுவீடன் இந்த செயலுக்கு அனுமதி அளிப்பதற்கு யெமன் கோபத்தை வெளியிட்டதோடு, இது குர்ஆன் மீதான வெறுக்கத்தக்க தாக்குதல் என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது. அல்ஜீரியா, டென்மார்க் மற்றும் சுவீடன் தூதுவர்களை அழைத்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான செயல்களுக்கு அனுமதிப்பது சமூகத்தின் சகவாழ்வுக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஈராக் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட இந்த குர்ஆன் எரிப்புக்கு டென்மார்க் கண்டனத்தை வெளியிடுகிறது” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.